Friday 15 August 2014

செவ்வாய் பிள்ளையார் வழிபாடு-Chevvai Pillaiyaar Vazhipadu


குடும்பம் செழிப்பதற்கும் குடும்பத்தினரின் நலனுக்காகவும் பெண்கள் செய்யும் ஒரு வழிபாடு இது. இன்று பலருக்கும் தெரியாத ஒரு வழிபாடாகவும் மாறி விட்டது.

இது ஆடி, தை, மாசி மாதங்களில் வரும் செவ்வாய் கிழமைகளில் செய்யும் ஒரு பூஜை. இந்த மூன்று மாதங்களில் வரும் ஏதேனும் ஒரு செவ்வாய் கிழமையில் செய்தாலே போதுமானது. இவ்வழிப்பாட்டிற்கு ஒரு சொல்லடையும் உண்டு 
"அசந்தா ஆடியிலும் தட்டினா தையிலும் மறந்தா மாசியிலும்"  இவ்வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். 

இதில் ஆண்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை. இது பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும். முன்னிரவு நேரத்திலேயே இப்பூஜையை செய்வது வழக்கம். (வீட்டில் உள்ள ஆண்கள் உறங்கிய பிறகே செய்ய வேண்டும்.)

இது தமிழ் மூதாட்டி ஔவையார் சொல்லி கொடுத்து விநாயகரை நினைத்து செய்வதால் இதை ஔவையார் பூஜை என்றும் சொல்வதுண்டு.

இப்பூஜையின்  முக்கிய நெய்வேத்தியமாக வைப்பது உப்பில்லா கொழுக்கட்டையாகும்.

பூஜை செய்யும் முறை:


பூஜை செய்யும் நாள் அன்று வீட்டை துடைத்து சுத்தம் செய்த பின், பூஜை செய்யும் இடத்தில் மாக்கோலம்  இடுதல் வேண்டும். பொதுவாக எங்கள் ஊரில் அக்கம் பக்கத்துக்கு வீட்டு பெண்கள் சேர்ந்து ஒரே வீட்டில்  ஒன்றாக கூடி செய்வது வழக்கம்.

இப்பூஜையில்  செய்யப்படும் உப்பில்லாகொழுக்கட்டை மிகவும் விசேஷமானது. இதனை வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமே உண்ண வேண்டும். ஆண்களுக்கு தர கூடாது.

இப்பூஜைக்கு  புங்க மர இலைகளை இட்லி தட்டில் வைத்து  அதன் மேல் கொழுக்கட்டைகளை செய்து வேக வைக்க வேண்டும்.
பொதுவாக செய்யும் பிடி கொழுக்கட்டையோடு அல்லாமல் கொழுக்கட்டை அடை செய்வது மிக முக்கியமான ஒன்றாகும்.

முதலில் மாவை வட்ட வடிவமாக தட்டி அதன் மேல் சிறு சிறு உருண்டை  வடிவ கொழுக்கட்டைகளை செய்து வேக  வைத்து படைக்க வேண்டும்.

பூஜையில் எத்தனை பெண்கள் கலந்து கொள்கின்றனரோ அத்தனை அடை கொழுக்கைடைகளை நெய்வேத்தியம் செய்து  அவர்கள் மட்டும்  பூஜை முடிந்த உடனேயே உண்டு விட  வேண்டும்.

இக்கொழுக்கட்டைகளில் உப்பில்லாவிடினும்  தேங்காய் நிறைய சேர்ப்பதினால் ருசியாகவே இருக்கும்.

(கொழுக்கட்டை செய்யும் முறை இத்திரியில் கொடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை)

ஒரு நுனி இலையில் பசுஞ்சாணத்தால்  பிள்ளையார் பிடித்து வைத்து புங்க இலைகளையும் புளிய மர இலைகளையும் பரப்பி அதன் மேல் செய்து வைத்த அடை கொழுக்கட்டைகள், மற்றும் வெற்றிலை, பாக்கு, பழங்களோடு தேங்காய் உடைத்து வைத்து விநாயகரையும் ஔவையாரையும் நினைத்து  படைக்க  வேண்டும்.
அத்தோடு ஒரு தேங்காய் மூடியில் சிறிது தேங்காயை துருவி வைத்து கொழுக்கட்டைகளுடன்  சேர்த்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.
இத்தேங்காய் பூவையும் பெண்கள் மட்டுமே உண்ணுதல் வேண்டும்.

பொதுவாக பூஜைகளில் கலந்து கொள்பவர்களில் வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்களே முன்னின்று செய்வார். அவரே இப்பூஜையில்  மிக முக்கியமான ஒன்றான அவ்வையார் கதையை கூறுவார். கேட்பவர்களில் ஓரிருவர் ஒரு புங்க அல்லது  புளிய மரகுச்சி ஒன்றால் கதை கேட்பதற்கு அறிகுறியாக('ம்'  கொட்டுவது போல் ) ஒரு பாத்திரத்தில் மெதுவாக தட்டி கொண்டே இருப்பர். இக்கதை மிக மிக ரகசியமாது :) .இதனை பூஜையின் பொழுது மட்டுமே சொல்லி கேட்க வேண்டும்.இது இப்பூஜையின் வரலாற்று ஆரம்பத்தை சொல்லும் கதையாகும்.இதனை  மூன்று முறை சொல்லி சூடம் ஏற்றி ,நெய்வேத்தியம் செய்து படையலை முடிக்க வேண்டும்.

அடுத்த நாள் விடியற் காலையிலேயே எழுந்து இந்த பூஜை செய்த இடத்தை சுத்தம் செய்து பிள்ளையார் மற்றும் பயன்படுத்திய இலைகளை யார் கண்ணிலும் படாமல் எடுத்து சென்று நீரில் கரைத்து விட வேண்டும்.

பூஜை செய்த நாளுக்கு மறுநாள் (புதன் கிழமை) யாருக்கும் எந்த பொருளையும் கடனாகவோ, தானமாகவோ தருதல் கூடாது.

(இது என் அம்மா செய்ய அருகில் இருந்து பார்த்து தெரிந்து கொண்டவை ஆகும். இப்பூஜையை  பற்றி மேலும் அறிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளவும்)
  

7 comments:

  1. இப்பூஜையை வளர் பிறை செவ்வாய் கிழமைகளில் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. ஏன் யாரும் கதை சொல்ல மரட்டேன் என்கிறர்கள்
    இந்த விஞ்ஞான உலகில்

    ReplyDelete
  3. இதை முடித்து வரும் வெள்ளி கிழமை வெள்ளி பிள்ளையார் பூஜை செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. இதை முடித்து வரும் வெள்ளி கிழமை வெள்ளி பிள்ளையார் பூஜை செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வெள்ளி பிள்ளையார் கதை தயவுசெய்து பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்.

      Delete
  5. Please tell me about Friday pullaiyar pūja procedure.

    ReplyDelete
  6. கதை சொல்வதால் தவறில்லை. ஆனால் ஆண்கள் கலந்து கொன்னக் கூடாது என்பதால் வெளியிடுவதில்லை.

    ReplyDelete